என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Thursday 4 July 2013

மழை இரவொன்றில்....

ஒரு மழை காலத்து , 
இரவொன்றில், 
சன்னல் திறந்து, 
மழை சாரலை, 
மெல்ல முகத்தில், 
உள்வாங்கி,
உன் நினைவுகளோடு,
கரம்கோர்த்து,
சிலிர்த்தேன்..

மழை,
மலை வாசஸ்தலம்,
இரண்டும் சேர்ந்ததொரு,
வாழ்வியலில்,
அழகான இளமை பருவம்,
உன்னோடு,
காதலாகி பின்னி
பிணைந்திருந்தது ..

அற்றை நாளின்,
சூழல்,
அற்றை நாளின்,
உறவுகள்,
அற்றை நாட்களின்,
நண்பர்கள்,
என்று அற்றை நாட்கள்,
அழகாய் இருந்தது..

இதில் என்னோடு,
நீ,
மழலை காலத்தில்,
இருந்தே,
பேரன்பை பேசி,
இறுக்கமாய்,
நட்பை வளர்த்தாய் ..

உன் பெற்றோர்,
உன் உறவுகள்,
என் பெற்றோர்,
என் உறவுகளோடு,
அழகிய சிநேகம்,
அழகிய மனிதம்
வளர்த்து
அழகாய் வாழ்ந்தனர் .

பிறிதொரு அழகிய,
மழை நாளில்,
காதலை சொன்னேன்..

காத்திருந்தது போல,
ஏற்று கொண்டாய்..
என் வாழ்வியலில்,
அழகாய் இணைந்தும்,
கொண்டாய்..

நாட்கள்,
வருடங்களாக,
வேகமாக நகர்ந்ததை,
உணரவே இல்லை...

அத்தனை சிறப்பாய் ,
ஒரு வாழ்வினை ,
எனக்கு பரிசளித்தாய் ..

நாட்கள் நகர ,
அந்திமம் தொட்ட போது,
நம் பிள்ளைகளின்,
திருமண கடமைகளையும்,
அழகாய் முடித்தாய்..

பொருள் சேர்க்க ,
பிள்ளைகள் எங்கோ ,
தொலைவில் சென்றுவிட ,
மீண்டும் நீயும்,
நானும்,
அழகான அந்திம,
காதலில்,
வாழ்ந்திருந்தோம்..

ஒரு மழை நாளில்,
உறக்கத்திலேயே,
என்னை அணைத்தபடி ,
என்னை விட்டு பிரிந்தாய்..

ஓடோடி வந்த பிள்ளைகள்,
உனக்கான,
இறுதி பயணத்தில்,
கலந்து கொண்டு,
மீண்டும் தொலைவில்,
சென்று விட,

என் வாழ்வியலில்,
முதல் முறையாக,
அந்திம காலத்தில்
நான் தனித்து விடப்பட்டேன்...

உன் நினைவுகளோடு,
புதிதாய் தனிமையும்,
சேர,
நாட்கள் நகர்கிறது,
என் இறுதி பயணத்தை,
எதிர் நோக்கி..